Skip to main content

Advertisement

'டிவி, மான் என எல்லாவற்றையும் விழுங்கும்' - புலி சுறா கடல் சூழலுக்கு செய்யும் நன்மை

புலி சுறா
Hannes Klostermann/ Ocean Image Bank

மான் முதல் தொலைக்காட்சிப் பெட்டி வரை, புலி சுறாக்கள் (Tiger sharks) உணவைத் தேர்ந்தெடுப்பதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாதவை. ஒரு நல்ல விருந்து கிடைக்கும் என்றால் அவை சூறாவளியையும் பொருட்படுத்தாமல் களமிறங்கும். அதிர்ஷ்டவசமாக, இவற்றின் இந்த அசாத்தியமான உணவுப் பழக்கம் கடல்வாழ் உயிரினங்களுக்கும் நன்மைகளைச் செய்கிறது.

ஒரு சிறிய பேருந்தின் அளவும், டார்பிடோ ஏவுகணை போன்ற நெறிப்படுத்தப்பட்ட உடலமைப்பும், அதிக வலிமைமிக்க தாடை ஆற்றலும் கொண்ட புலி சுறாக்கள், உலகின் மிகப்பெரிய வேட்டைச் சுறாக்களில் ஒன்றாகும்.

கடல்சார் பல்லுயிர் கண்காணிப்பு வலையமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் நீல் ஹேமர்ஷ்லாக், "இவை கடலின் 'டேங்கர்கள்' (Tanks)" என்று கூறுகிறார். மேலும், அனைத்து சுறா இனங்களையும் விட இவை மிகவும் பரந்த அளவிலான உணவை உட்கொள்வதால், "கடலின் குப்பைத் தொட்டிகள்" என்றும் அழைக்கப்படுகின்றன.

இவை மெல்லுடலிகள், ஸ்டிங்ரே மீன்கள், கடல் பாம்புகள், சீல் உயிரினங்கள், கணவாய்கள் மற்றும் திமிங்கலங்களை விரும்பிச் சாப்பிடுகின்றன. கடல் பறவைகள் மற்றும் நில வாழ் விலங்குகளையும் இவை விட்டுவைப்பதில்லை.

பெருச்சாளிகள், மான்கள், நாய்கள், ஆடுகள் மற்றும் பூனைகள் கூட இவற்றின் வயிற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மிகவும் கூர்மையான முட்களைக் கொண்ட 'எக்கிட்னா' (echidna) என்ற உயிரினத்தை ஒரு சுறா வாந்தி எடுத்தது. ஒருவேளை அதன் முட்கள் சுறாவின் தொண்டையை உறுத்தியிருக்கலாம்.

மனிதர்கள் போடும் குப்பைகளும் இவற்றின் உணவுப் பட்டியலில் அடங்கும்: சிப்ஸ் பாக்கெட்டுகள், ஆணுறைகள், சிகரெட்டுகள், வாகனப் பதிவு தகடுகள், டயர்கள், டிவிக்கள் - ஏன், முழுமையான ஒரு இரும்புக்கவச ஆடை கூட இவற்றின் வயிற்றில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதேபோல், மனிதர்களும் இவற்றின் பட்டியலில் உள்ளனர். வெள்ளைச் சுறா (Great White) மற்றும் காளைச் சுறாக்களுடன் (Bull Shark) சேர்த்து, புலி சுறாக்களும் உலகின் மிக ஆபத்தான "மூன்று பெரிய" சுறா இனங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

ஆனால், நீங்கள் ஒரு சுறாவால் தாக்கப்படுவதை விட, கடலலை இழுத்துச் செல்லப்படுவதாலோ அல்லது மின்னல் தாக்குதலாலோ பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

நல்ல உணவு கிடைக்கும் என்றால் இவை சூறாவளியின் மையப்பகுதிக்குக் கூட நீந்திச் செல்லும். ஆனால், இவற்றின் வலுவான ஜீரண சக்தி பிற உயிரினங்களுக்கும் நன்மை பயக்கிறது.

இறந்த மற்றும் இறக்கும் தருவாயில் உள்ள உயிரினங்களை உண்பதன் மூலம், புலி சுறாக்கள் உணவுச் சங்கிலியைச் சுத்தப்படுத்துகின்றன. இதன் மூலம் கடல்சார் சூழலின் ஆரோக்கியத்தைப் பேண உதவுகின்றன.

சூறாவளி நேரத்தில் தூய்மைப் பணி

ஒரு புயல் நெருங்கும்போது, பெரும்பாலான சுறாக்கள் "வளிமண்டல அழுத்தத்தின் மாற்றத்தைக் கண்டறிந்து, பாதிப்பு குறைந்த ஆழமான கடற்பகுதிக்குச் சென்றுவிடும்" என்று எக்ஸீட்டர் பல்கலைக்கழகத்தின் கடல் பாதுகாப்பு அறிவியல் விரிவுரையாளர் பில் தோஹர்ட்டி கூறுகிறார்.

ஆனால், புலி சுறாக்களோ ஒரு பெரிய விருந்து கிடைக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்து, புயல் வரும் இடத்தைத் தேடி வருகின்றன - மேலும் "இறந்த விலங்குகளை உண்பதற்காக" அங்கேயே தங்கியிருக்கின்றன.

2016-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி 'மேத்யூ' சூறாவளி பஹாமாஸ் தீவுகளைத் தாக்கியபோது, ஹேமர்ஷ்லாக்கினால் இந்த நிகழ்வை விரிவாகக் கண்காணிக்க முடிந்தது.

கிராண்ட் பஹாமா கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு பெரிய மணல் திட்டான 'டைகர் கடற்கரை', புலி சுறாக்களுக்குப் பெயர் பெற்ற பிரபல டைவிங் தளமாகும்.

கடல்புற்கள் மற்றும் பவளப்பாறைகள் நிறைந்த இந்த தெளிவான வெதுவெதுப்பான நீரில், "கடலின் ஆழத்தை விட நீளமான" புலி சுறாக்கள் அதிகளவில் காணப்படும் என்று ஹேமர்ஷ்லாக் கூறுகிறார்.

பிரிவு 5 என்ற அதிகபட்ச தீவிரத்தன்மை கொண்ட அச்சூறாவளி நேரடியாகத் தாக்கியபோதும், புலி சுறாக்கள் ஆழமற்ற கடற்கரை ஓரங்களிலேயே தங்கியிருந்தன. புயல் கடந்து சென்ற பிறகு, அப்பகுதியில் புலி சுறாக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருந்தது.

புலி சுறா
Dani Escayola/ Ocean Image Bank

புலி சுறாக்கள் குளிர் ரத்த உயிரினங்கள் (Ectothermic) என்பதால், அவற்றால் சொந்தமாக உடல் வெப்பத்தை உருவாக்க முடியாது என்று ஹேமர்ஷ்லாக் கூறுகிறார். எனவே, அவற்றின் நகர்வுகள் சமவெப்பக்கோடு என்று அழைக்கப்படும் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட நீர்நிலைகளைப் பின் தொடர்கின்றன. இதுவே ஒரு வெப்பமண்டல சூறாவளி உருவாகத் தொடங்கும் வெப்பநிலையுமாகும்.

பிரசவமான புலி சுறாக்கள், தங்கள் வயிற்றுச் சூட்டைப் பராமரிக்க 'டைகர் கடற்கரையின்' வெதுவெதுப்பான நீரைப் புகலிடமாகக் கொள்கின்றன என்கிறார் ஹேமர்ஷ்லாக்.

சுறாக்கள் மீது சுற்றுலா ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்ய, ஹேமர்ஷ்லாக்கும் அவரது குழுவினரும் டைகர் கடற்கரை புலி சுறாக்களின் உடலில் ஒலி அலைச்சிக்ஞை கருவிகளைப் (Acoustic tags) பொருத்தியிருந்தனர்.

10 ஆண்டுகள் இயங்கும் அக்கருவிகள் மூலம், 2016-ஆம் ஆண்டில் மேத்யூ சூறாவளியின் போது சுறாக்களின் நடத்தையை ஹேமர்ஷ்லாக்கால் ஆய்வு செய்ய முடிந்தது.

"அவை அனைத்தும் தப்பித்து ஓடிவிடும் என்றுதான் நான் நினைத்தேன்," என்கிறார் ஹேமர்ஷ்லாக்.

"ஆழமற்ற நீரில் பாறைகள் உருண்டோடும், கடலடி மணல் சுழன்றடிக்கும். சுறாக்கள், கடற்பசுக்கள் போன்றவை கடற்கரையில் தூக்கி வீசப்படுவதைப் பார்க்கலாம். ஆனால் ஆழமான கடல் பாதிக்கப்படுவதில்லை; அது புயலிலிருந்து பாதுகாப்பான புகலிடத்தைத் தருகிறது." என்றும் அவர் தெரிவித்தார்.

புயல் வரும் அறிகுறிகள் தெரிந்ததும் பெரும்பாலான சுறாக்கள் கடலோரப் பகுதிகளை விட்டு வெளியேறிவிடும் என்றும், சில இனங்கள் புயல் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே சென்றுவிடும் என்றும் முந்தைய ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆனால், சூறாவளிக்கு முன்னும் பின்னும், சூறாவளி நிலவிய நேரத்திலும் புலி சுறாக்களைக் கண்காணித்த ஹேமர்ஷ்லாக், "நான் அதிர்ச்சியடைந்தேன். அவை தப்பிச் செல்லாதது மட்டுமின்றி, அதே நாளில் மேலும் பல புலி சுறாக்கள் அங்கு வந்தடைந்தன" என்கிறார்.

"புயல் பல ஆமைகள், மீன்கள், நண்டுகள், பறவைகளைக் கொன்றது. புயலால் இறந்துபோன மற்றும் உயிருக்குப் போராடும் உயிரினங்களை உண்பதற்கான வாய்ப்பாகவே புலி சுறாக்கள் அந்தச் சூறாவளியைப் பார்த்துள்ளன என நாங்கள் கருதுகிறோம்."

புலி சுறாக்கள் யுத்த டாங்கிகள் போல வலிமையாக அமைக்கப்பட்டிருப்பதாலேயே, புயல் நேரத்திலும் அவைகளால் அங்குத் தங்க முடிந்ததாக ஹேமர்ஷ்லாக் நம்புகிறார்.

அச்சமூட்டும் பராமரிப்புக் குழு

புலி சுறா
William Tan

உணவு மிகுதியாகக் கிடைக்கும் பருவ கால நிகழ்வுகளையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள புலி சுறாக்கள் கற்றுக்கொண்டுள்ளன.

உதாரணமாக, ஆஸ்திரேலியாவின் ரெய்ன் தீவில் பச்சை ஆமைகள் முட்டையிடும் பருவம், அல்லது ஹவாயின் ஃப்ரெஞ்ச் ஃபிரிகேட் ஷோல்ஸ் பகுதியில் ஆல்பட்ரோஸ் பறவைக் குஞ்சுகள் பறக்கப் பழகும் கோடைக்காலம் ஆகியவற்றைக் கூறலாம்.

சுறாக்கள் எளிதில் வேட்டையாடக்கூடிய இந்தக் காலக்கட்டத்தை சரியாகக் கணித்து, தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் அதே நாளில் அதே இடத்துக்கு வந்து சேர்கின்றன.

அந்த உணவை அடைய அவை நீண்ட தூரம் பயணிக்கின்றன. வெப்பமண்டல பவளப்பாறைகளிலிருந்து மத்திய வட அட்லாண்டிக் பெருங்கடலின் திறந்தவெளி நீர்நிலைகளுக்குச் சென்று வர, ஆண்டுக்கு 4,600 மைல்களுக்குப் (7,500 கி.மீ) மேல் வழக்கமாகப் பயணிக்கின்றன.

ஒரு புலி சுறா அட்லாண்டிக் பெருங்கடலை மூன்று ஆண்டுகளில் சுற்றி வர 27,340 மைல்கள் (44,000 கி.மீ) பயணம் செய்து சாதனை படைத்துள்ளது.

தங்களுக்கு விருப்பமான வேட்டைக்களத்தை அடைந்ததும், புலி சுறாக்கள் முடிந்தவரை தங்கள் ஆற்றலைச் சேமிக்கின்றன. ரெய்ன் தீவில், ஆரோக்கியமான ஆமைகளை வேட்டையாடுவதை விட, இறந்த மற்றும் பலவீனமான ஆமைகளை உண்பதையே அவை விரும்புகின்றன.

பலவீனமான ஆமைகளுக்கு இது ஒரு கொடூரமான விஷயமாகத் தோன்றலாம், ஆனால் இதன் மூலம் சுறாக்கள் நோய்கள் பரவாமல் தடுக்கின்றன.

மேலும், ஆமைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பல கடல்வாழ் உயிரினங்களுக்கு முக்கிய வாழ்விடமாக இருக்கும் கடல்புற்கள் அளவுக்கு அதிகமாக மேயப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

இங்கிலாந்தின் எக்ஸீட்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும், ஃபிஜி சுறா ஆய்வகத்தின் நிறுவனருமான நடாஷா மரோசி, ஃபிஜியைச் சுற்றியுள்ள கடல்களில் வாழும் புலி சுறாங்களைப் பற்றித் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். பயங்கரமான புகழ்பெற்ற போதிலும், இந்த சுறாக்களுக்கு என்று தனித்துவமான குணநலன்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.

"நான் சந்தித்த ஒவ்வொரு சுறாவும் தனித்துவமானதாகவும், வெவ்வேறு நடத்தைகளைக் கொண்டதாகவும் இருந்தன." 'சுனாமி' என்று பெயரிடப்பட்ட ஒரு இளம் பெண் சுறா "அதிக துடிப்பும் கோபமும்" கொண்டதாக இருந்தது என்றும், 'ஜாவ்ஜினா' என்ற மற்றொரு சுறா "ஒரே நேரத்தில் பலவீனத்தையும் போர்வாள் குணத்தையும்," வெளிப்படுத்தியது என்றும் அவர் கூறுகிறார்.

பஹாமாஸிலிருந்தும் இதுபோன்ற கதைகள் வருகின்றன. டைகர் கடற்கரையில் உள்ள சில புலி சுறாக்கள் தைரியமாகவும், சில மிகவும் வெட்கப்படும் இயல்புடனும் இருப்பதாக டைவர்ஸ் தெரிவிக்கின்

புலி சுறா
Carlos Diaz/ Ocean Image Bank

"மிகப்பெரிய இந்த வேட்டை விலங்குகளுக்கு மத்தியில் கடலில் நேரத்தைச் செலவிடுவதை நான் விரும்புகிறேன்," என்கிறார் ஹேமர்ஷ்லாக். இவரது முந்தைய ஆய்வுகள், இந்த சுறாக்களுக்குள் சிக்கலான சமூக வாழ்க்கையும், குறிப்பிட்ட சுறாக்களுடன் நெருங்கிய நட்பும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

எனவே, கடலின் இந்த 'டேங்கர்களுக்குள்' ஒரு மென்மையான பக்கமும் இருக்கிறது. அவற்றின் உணவுப் பட்டியல் எல்லையற்றதாக இருந்தாலும், புலி சுறாக்கள் வெறும் இயந்திரத்தனமாக உண்ணும் உயிரினங்கள் அல்ல. மேலும், கடல்சார் சூழலமைப்பில் உச்சகட்ட வேட்டையாடிகளாக அவை மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றுகின்றன என்கிறார் மரோசி.

"உணவுச் சங்கிலியின் உச்சியில் இருந்துகொண்டு, பிற உயிரினங்களின் பரவல், நடத்தை மற்றும் எண்ணிக்கையை அவைகளால் கட்டுப்படுத்த முடிகிறது." புலி சுறாக்களின் இந்த அசாத்தியமான உணவுப் பழக்கமே கடலின் வாழ்வியலைச் சமநிலையில் வைத்திருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!